
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 11- ஆம் தேதி கம்பம் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் மற்றும் பூச்சொரிதல் விழா, மறு காப்பு கட்டுதல் மற்றும் வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
25-ம் தேதி வடிசோறு நிகழ்ச்சியும் குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று தேரோட்டம் மற்றும் தீ மிதித்தல் நடைபெற்றது. தேரோட்டத்தை பரமத்தி வேலூர் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி துவக்கி வைத்தார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை சேர்த்தனர். விழாவில் பாண்டமங்கலம், குச்சிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தீமிதி நிகழ்வில் பாண்டமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று பொங்கல் மாவிளக்கு பூஜையும், நாளை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், 30-ம் தேதி காலை மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 31-ம் தேதி குச்சிபாளையத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.