
சென்னை,
மணிரத்னம் இயக்கத்தில் கமல் , சிம்பு , திரிஷா , அபிராமி , அசோக் செல்வன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ள படம் 'தக் லைப்'. ஜூன் 5 ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ரகுமான் இசையில் 8 பாடல்கள் 'தக் லைப்' படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த 8 பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக 'முத்த மழை' மற்றும் 'அஞ்சு வண்ண பூவே' ஆகிய இரு பாடல்கள். இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை இந்தி மற்றும் தெலுங்கில் சின்மயி பாடியிருக்கிறார். தமிழில் தீ இந்த பாடலை பாடியுள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில் சின்மயி இந்த பாடலை பாடினார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ரகுமான் இசையையும் சின்மயி இதை பாடியிருக்கும் விதத்தையும் பாராட்டி வருகிறார். தீ பாடியதை விட பெரும்பாலான ரசிகர்கள் சின்மயி குரலை அதிகம் விரும்புகிறார்கள். 'இப்படிபட்ட குரலையா பாடவிடாமல் தடை விதித்திருக்கிறார்கள்' என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ரசிகர்களின் வரவேற்பைத் தொடர்ந்து தற்போது ஆடியோ லாஞ்சில் சின்மயி பாடிய காணொளி யூடியூபில் வெளியானது.
திரைப்படத்தில் தெலுங்கு, ஹிந்தியில் சின்மயியும் தமிழ் மொழியில் பாடகி தீயும் பாடியிருந்தனர். தீ பாடியது ரசிகர்களிடம் போதிய கவனத்தைப் பெறவில்லை. இதனால், தமிழிலும் சின்மயியைப் பாட வையுங்கள் எனப் படக்குழுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற சின்மயி, "'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை தீதான் பாடியிருப்பார். ஆனால், அன்று அவர் ஊரில் இல்லை. அதனால், நான் பாடினேன். எனக்குக் கிடைத்த வரவேற்பை நம்பவே முடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. தீக்கு தனித்துவமான குரல் வளம் உண்டு. தமிழில் முத்த மழை பாடலுக்கு அவரைப் பயன்படுத்தியற்கு அப்பாடலுக்கு ஒரு வித்தியாசத்தைக் கொடுப்பதற்காகவும் இருக்கலாம்.என்னுடைய 20-வது வயதில் முத்த மழையை இந்தளவிற்குப் பாடியிருக்க முடியாது. குரல் நுணுக்கங்களை அடைய நீண்ட கால அனுபவங்களும் காரணம். இளம் திறமையாளரான தீ இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி, ஷ்ரேயா கோஷல்களை விழுங்கலாம். எங்களுக்குள் எந்தப் போட்டிகளும் இல்லை. பாடகி தீயையும் என்னையும் ஒப்பிடக்கூடாது." எனத் தெரிவித்துள்ளார்
'தக் லைப்' படத்தின் 'முத்த மழை' பாடலை சின்மயி குரலில் கேட்க அருமையாக உள்ளது. இந்த பாடலுக்கு நான் முற்றிலும் அடிமையாகிவிட்டேன் என்று இயக்குநர் வெங்கட் பிரபு, பாடகி சின்மயியை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.