திருச்சி: திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கூட்டம் திருச்சியில் 2 நாள் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தைவெற்றி பெறசெய்வது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலை யாளம். ஒடியா மொழிகளுக்கு ரூ.147 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ததற்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் நிறைவுநாளான நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அவசர நிலையின் 50வது ஆண்டும், மோடி அரசின் அறிவிக்கப்படாத அவசர நிலையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு மாநில செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே. கே.பாலகிருஷ்ணன், உவாசுகி சிறப்புரையாற்றினர். இதற்கிடையே மாநில செயலாளர் சண்முகம் அளித்த பேட்டி:
ரயில் பயணிகளின் சலுகைகளை பறித்துவிட்டு 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது கண்டனத்துக்குரியது. கட்டண உயர்வை அமல்படுத்தக்கூடாது. 50 ஆரம்பர சுகாதர நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கும் திட்டத்தில் தனியார் பங்களிப்பின்றி தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும். எங்களின் போராட்டங்களை மாநில அரசு ஒடுக்கவில்லை. திமுக கூட்டணியில் பிளவு வராதா, அவர்கள் கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறி அதிமுகவுடன் இணையாதா? என்று அதிமுக எதிர்பார்த்து காத்திருக்கிறது. திமுக கூட்டணி வலுவாக உள்ளது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவெடுப்பது எங்கள் கட்சி தான். இதுகுறித்து தேர்தல் நேரத்தில் திமுகவுடன் பேசி முடிவெடுப்போம் பாஜ-அதிமுக கூட்டணியை வீழ்த்த நாங்கள் தேர்தல் யுக்தியை வகுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஜ-அதிமுக கூட்டணியை வீழ்த்துவோம்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.