புதுடெல்லி: சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்க, பாகிஸ்தான் செல்லக்கூடாது என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப். 19ம் தேதி பாகிஸ்தானில் துவங்க உள்ளன. இந்தியா பங்கேற்கும் போட்டிகள், பிசிசிஐ எதிர்ப்பால் துபாயில் நடததப்பட உள்ளன. இந்நிலையில், இந்த போட்டிகள் தொடர்பாக பாகிஸ்தானில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கக் கூடாது என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பையும், அதன் பின் நடக்கும் போட்டோ ஷூட்டையும் வேறு இடத்துக்கு மாற்றும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ஐசிசி) பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் ஆடும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் பெயர் பிரின்ட் செய்த ஜெர்சி ஆடைகளை அணிவதை தவிர்க்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத பிசிபி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கிரிக்கெட்டில் அரசியலை பிசிசிஐ நுழைக்கிறது. விளையாட்டுக்கு இது நல்லதல்ல. பாகிஸ்தானில் விளையாட மறுத்தனர்; பின், தங்கள் கேப்டனை நிருபர் சந்திப்புக்கு அனுப்ப மறுக்கின்றனர். பாக். பெயர் பொறித்த ஆடையை அணியவும் அவர்கள் விரும்பவில்லை. ஐசிசி இதை அனுமதிக்க கூடாது. இவ்விஷயத்தில் பிசிபிக்கு ஐசிசி ஆதரவளிக்க வேண்டும்’ என்றார்.
The post பாக்.கில் நிருபர் சந்திப்புக்கு செல்ல ரோகித்துக்கு தடை: பிசிசிஐ உத்தரவால் பிசிபி அதிர்ச்சி appeared first on Dinakaran.