
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகின் ஷா அப்ரிடி ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இவர்களை பின்தொடர்பவர்களால் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை அணுக முடியவில்லை.
முன்னதாக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்தது. மேலும், பாகிஸ்தானின் பல நடிகர் - நடிகைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டன. முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் யூடியூப் சேனலும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.