டெல்லி : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அம்மக்களும் ஒரு நாள் இந்தியாவுடன் இணைவார்கள் என்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தி ரூ.1.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.24,000 கோடியாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் தாக்கியபோது கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டோம். பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், எதிரிகளின் விமான தளங்கள், ராணுவ நிலைகளை குறிபார்த்து தாக்கினோம்.
ராணுவ வலிமையை இந்திய தாக்குதல் பறைசாற்றியது; கட்டுப்பாட்டுடன் இந்தியா நடந்துகொண்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்களும் இந்தியாவின் அங்கம்தான். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அம்மக்களும் ஒரு நாள் இந்தியாவுடன் இணைவார்கள். ராணுவ தளவாடங்களை இங்கு தயாரிப்பது தேச பாதுகாப்புக்கு அவசியம் என்பதை சிந்தூர் நடவடிக்கை நிரூபித்துள்ளது. “மேட் இன் இந்தியா’ எனும் திட்டம் தான் நாட்டிற்கு மிகப்பெரிய பாதுகாப்பை அளிக்கிறது. இந்த திறன் நம்மிடம் இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு எதிராக இவ்வளவு பெரிய நடவடிக்கையை எடுத்திருக்க முடியாது. போர் விமானம், ஏவுகணையை மட்டும் இந்தியா தயாரிக்கவில்லை; மாறாக நவீன தொழில்நுட்பம் மூலம் தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பதிலடிக்கு புதிய வடிவத்தை கொடுத்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அம்மக்களும் ஒரு நாள் இந்தியாவுடன் இணைவார்கள் :ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு appeared first on Dinakaran.