
ஜம்மு காஷ்மீர்,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்து போர் பதற்றம் உருவாகியது.
அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இதன்படி எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது. இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, நேற்று இரவு முதல் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது, ஆந்திர பிரதேச மாநிலம் சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் முரளி நாயக் என்பவர் வீர மரணம் அடைதுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் நேற்று நடந்திருக்கலாம் என்றும், அவரின் உடல் நாளை அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே ராணுவ வீரர் முரளி நாயக்கின் மறைவுக்கு ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்த கடினமான நேரத்தில் அவர்கள் அனுபவித்த துன்பங்களை உணர்ந்து, நாயக்கின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டைப் பாதுகாக்கப் பணியாற்றும் ஆயுதப் படைகளில் உள்ளவர்களின் துணிச்சலுக்கு சான்றாக முரளி நாயக்கின் தியாகம் நினைவுகூரப்படும், மதிக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.