பாகிஸ்தானின் பொய்களை அம்பலப்படுத்திய பிரதமர்

3 weeks ago 6

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் இருக்கும் பைசரான் புல்வெளியில் கடந்த மாதம் 22-ந்தேதி சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 25 பெண்கள் தங்கள் குங்குமத்தை இழந்து விதவைகளானார்கள். நமது பெண்களின் குங்குமத்தை அழித்தவர்களை அழித்துவிட்டோம் என்று இப்போது பிரதமர் நரேந்திர மோடி சொல்வது போல உடனடியாக நமது ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பயங்கரவாதிகள் வசித்து வந்த 9 இடங்களை மட்டும் குறி வைத்து துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் குண்டுகளுக்கு இரையானார்கள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோரங்களில் குண்டுகளை வீசியும், டிரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர். இந்தியா தாக்கியது பயங்கரவாதிகளை மட்டும்தான். பாகிஸ்தானில் உள்ள பொதுமக்களையோ, ராணுவ தளங்களையோ இலக்காக நிர்ணயிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் இந்த தார்மீகத்தை கடைப்பிடிக்கவில்லை. பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், டிரோன்களையும் இந்தியா தனது 'எஸ்-400', ஆகாஷ் போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை வைத்து தரையில் விழுவதற்கு முன்பாக நடுவானிலேயே தூள் தூளாக்கியது.

இந்தியாவின் தாக்குதல்களை 4 நாட்களுக்கு மேல் எதிர்கொள்ளமுடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மேற்கொண்டது. அந்த 4 நாட்களில் பாகிஸ்தான் பல பொய்களை கட்டவிழ்த்துவிட்டது. 'இந்தியாவின் 2-வது பெரிய விமான தளமான பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமான தளத்தை தகர்த்துவிட்டோம். இந்தியாவிடம் உள்ள எஸ்-400 வான் பாதுகாப்பையும் நொறுக்கிவிட்டோம்' என்று கொக்கரித்தது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் ஆதம்பூர் உள்ளது. இங்குதான் ரபேல் மற்றும் மிக்-29 விமானப்படை பிரிவுகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஜலந்தர் நகரில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இது இருக்கிறது.

இந்த விமான தளத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 6.15 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து 'சி130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ்' விமானத்தில் வந்து இறங்கினார். அவர் தன் தலையில் கிழக்கு பிராந்திய விமானப்படை தொப்பியை அணிந்து இருந்தார். அங்கு கூடியிருந்த விமானப்படை வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒரு பெரிய 'சல்யூட்' அடித்தார். பிரதமர் மோடி முதலில் சொல்ல, அதை பின்தொடர்ந்து விமானப்படை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 'பாரத் மாதா கி ஜே' என்று சொன்ன கோஷம் விண்ணை பிளந்தது.

ஆதம்பூர் விமான தளத்தில் மிக்-29 போர் விமானத்தின் முன் பிரதமர் நின்று கொண்டு உரையாற்றியபோது, அவரது பின்னணியில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பும் பிரமாண்டமாக காட்சியளித்தது. இந்த காட்சி பாகிஸ்தானின் பொய்களையெல்லாம் அம்பலப்படுத்தியது. இந்த போரில் நமது முப்படைகள் அடைந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானில் மூலை முடுக்கில் ஒளிந்திருக்கும் பயங்கரவாதிகள் நிம்மதியாக மூச்சு விடமுடியாது என்பதை நிரூபித்துவிட்டது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் 'லக்ஷ்மண் ரேகா' என்ற எல்லை கோட்டை போட்டுவிட்டது. இந்தியா புத்தர் பூமி மட்டுமல்ல, எதிரிகளை துவம்சம் செய்யவேண்டும் என்ற பாடத்தை கற்பித்துக்கொடுத்த குருகோவிந்த் சிங்கின் பூமியுமாகும் என்று நமது வீரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி பறை சாற்றிவிட்டார்.

Read Entire Article