
கடந்த 5 ஆண்டுகளாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குழந்தை போல் இருப்பதாகவும், பா.ம.க.வில் தனக்கே அதிகாரம் உள்ளது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் அன்புமணியின் பேச்சுக்கு ராமதாசின் நெருங்கிய ஆதரவாளரான எம்.எல்.ஏ. அருள் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ. அருள் கூறியதாவது:-
எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட எந்த பதவிகளுக்கும் ஆசைப்படாதவர் டாக்டர் ராமதாஸ். அன்புமணியால், ராமதாசுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்து கொண்டிருக்க முடியாது. ராமதாஸ்தான் பா.ம.க.வுக்கு தாய். சுயம்புவாக கட்சியை வளர்த்தவர் ராமதாஸ்.
5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தையாக மாறி விட்டார் என அன்புமணி சொல்கிறார். அந்த குழந்தைதானே 3 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக அறிவித்தது. குழந்தையின் அறிவிப்பு எப்படி செல்லும்?. தெருவில் இலந்தை பழம் விற்பவர் கேவலமானவரா? ராமதாசை அவமானப்படுத்துவதாக நினைத்து, தெருவோர வியாபாரிகளை, பாட்டாளிகளை அன்புமணி அவமானப்படுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.