பஹல்காம் தாக்குதல்; கைது செய்யப்பட்ட இருவருக்கு மேலும் 10 நாட்கள் என்.ஐ.ஏ. காவல்

2 hours ago 1

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதன்படி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தாக்குதல் நடைபெற்றபோது சம்பவ இடத்தில் இருந்தவர்கள், தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக 2 பேரை கடந்த ஜூன் 22-ந்தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதன்படி பஹல்காமின் பட்கோலே பகுதியை சேர்ந்த பர்வேஸ் அகமது மற்றும் பஹல்காமின் ஹில்பார்க் பகுதியை சேர்ந்த பஷீர் அகமது ஜோதார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை கைது செய்யப்பட்டவர்கள் உறுதி செய்ததாகவும், கைது செய்யப்பட்ட இருவரும் பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உணவு, இருப்பிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளனர் என்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட பர்வேஸ் மற்றும் பஷீர் ஆகியோர் ஜூன் 23-ந்தேதி உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 5 நாட்கள் என்.ஐ.ஏ. காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் 10 நாட்களில் என்.ஐ.ஏ. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த 10 நாள் காவல் இன்றோடு முடிவுக்கு வந்த நிலையில், பர்வேஸ் மற்றும் பஷீர் ஆகியோர் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மேலும் 10 நாட்கள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Read Entire Article