
லக்னோ,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பீகாரை சேர்ந்த பிரபல போஜ்புரி பாடகி நேஹா சிங் ரதோர். இவர் பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் , 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலின்போது 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்ததை பிரதமர் மோடி தேர்தலில் வாக்குகள் பெற பயன்படுத்தினார். அதேபோல், தற்போது பஹல்காம் தாக்குதலை வைத்து பிரதமர் மோடி பீகாரில் வாக்குகளை பெற முயற்சிப்பார். பிரதமர் மோடி ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவார் என கூறுகின்றனர். ஆனால், அவரால் தனது சொந்த நாட்டில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தடுக்க முடியவில்லை' என தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இதை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானியர்கள் பயன்படுத்தினர். பாடகி நேஹாவின் பேச்சு தொடர்பான வீடியோவை பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர்கள் பலரும் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்தனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாடகி நேஹா மீது உத்தரபிரதேசத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் லக்னோ மாவட்டம் கச்ராகஞ்ச் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் நேஹா மீது தேசத்துரோகம் உள்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேஹா இதுவரை கைது செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.