
சென்னை,
தென்னிந்தியா முழுவதும் பவன் கல்யாணுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான அவரை இயக்க பல முன்னணி திரைப்பட இயக்குனர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த இயக்குனர்களின் பட்டியலில் தற்போது தேசிய விருது பெற்ற தமிழ் நடிகரும், இயக்குனருமான தனுஷ் இணைந்துள்ளார். நேற்று மாலை ஐதராபாத்தில் நடந்த ''குபேரா'' படத்தின் பிரீ-ரிலீஸ் விழாவின்போது, தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த தனுஷ், பவன் கல்யாணை இயக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
இது இரு நட்சத்திரங்களின் ரசிகர்களையும் உற்சாகமடைய வைத்திருக்கிறது. நடிப்பு மட்டுமின்றி, ப பாண்டி, ராயன் மற்றும் நீக் போன்ற படங்களை இயக்கி தனது ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்த தனுஷ், நான்காவதாக ''இட்லி கடை'' படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரைக்கு வருகிறது.