திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கச்சத்தீவை மீட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும், இந்திய அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது. தமிழகத்தில் சங்பரிவார் அரசியல் எந்த வகையிலும் நுழையாமல் தடுக்க, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்.
நடிகர் விஜய்க்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. தாமதமாக தற்போது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மத்தியஅரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். அந்தக் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுகதான். ஆனாலும், தேர்தலுக்குப் பின்புதான் முதல்வரை தேர்ந்தெடுப்போம் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது. இது தொடர்பாக பழனிசாமிதான்விளக்கம் அளிக்க வேண்டும்.