பழநியில் கனமழை வீடு இடிந்து 3 டூவீலர்கள் சேதம்: தொடர் நீர்வரத்தால் அணைகள் ஃபுல்

2 hours ago 2

பழநி: பழநியில் பெய்த கனமழைக்கு வீடு இடிந்து 3 டூவீலர்கள் சேதமடைந்தன. தொடர் நீர்வரத்தால் அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம், பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. மழைக்கு பழநி அருகே பாலசமுத்திரத்தில் கிழக்கு தெருவை சேர்ந்த அலீப்ராஜா (40) வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. மேலும் வீட்டருகே நின்ற 3 டூவீலர்கள் சேதமடைந்தன. பழநி நகரில் பெய்த மழையின் அளவு 16 மிமீ பதிவாகி உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 65 அடி உயரம் கொண்ட பாலாறு – பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 49 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 75 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 9 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் பெய்த மழையின் அளவு 50 மிமீ ஆக பதிவாகி உள்ளது.

66.47 அடி உயரமுள்ள வரதமாநதி அணை முழுவதும் நிரம்பி விட்டது. அணைக்கு விநாடிக்கு 147 கனஅடி நீர் வருகிறது. வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் பெய்த மழையின் அளவு 30 மிமீ ஆக பதிவாகி உள்ளது. 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டம் 67.30 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 52 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 7 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் பெய்த மழையின் அளவு 7 மிமீ ஆக பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post பழநியில் கனமழை வீடு இடிந்து 3 டூவீலர்கள் சேதம்: தொடர் நீர்வரத்தால் அணைகள் ஃபுல் appeared first on Dinakaran.

Read Entire Article