
மும்பை,
மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் ஜப்ராபாத் தாலுகா காடேகாவன் கிராமத்தில் ஜில்லா பரிஷத் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வி.கே. முண்டே. சம்பவத்தன்று ஆசிரியர் வி.கே. முண்டே பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது, அவருக்கு திடீரென தூக்கம் வந்துள்ளது. இதனால் அவர் மாணவர்களிடம் பாடத்தை படியுங்கள் என கூறிவிட்டு சேரில் அமர்ந்தபடி தூங்கி உள்ளார். ஆசிரியர் பாடம் நடத்தாமல் தூங்குவதை ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
அந்த வீடியோவில், ஆசிரியர் வி.கே. முண்டே, சேரில் அமர்ந்தபடி மேஜை மீது கால்களை தூக்கி வைத்தவாறு குறட்டைவிட்டு தூங்குகிறார். வீடியோ எடுக்கும் நபர், ஆசிரியர் எவ்வளவு நேரமாக தூங்குகிறார் என கேட்கிறார். அதற்கு மாணவன் ஒருவன் சுமார் ½ மணி நேரமாக தூங்குகிறார் என பதில் அளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அரசு பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் தூங்குவது பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் வி.கே. முண்டே மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல கல்வி அதிகாரி சதீஷ் ஷிண்டே தெரிவித்தார்.