பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு குழு செயல்பாடுகள்

6 months ago 18

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான செய்திகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கூடவே போதைப்பழக்கத்தின் விளைவாக ஏற்படும் குற்றங்களும் பெருகிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு ஒரு உலகளாவிய பிரச்னை.

பல்வேறு சமூக, கலாச்சாரக் காரணங்களினால் மாணவர்களும், இளைஞர்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இந்த பேரவலத்திற்கான தீர்வுதான் என்ன?

2021இல் எடுத்த புள்ளிவிவரப்படி 15 முதல் 64 வயதிற்கு உட்பட்டவர்களில் 17 பேரில் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார் என்று ஐ.நா போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்ற அலுவலகம் (UNODC) வெளியிட்ட உலகப் போதைப்பொருள் அறிக்கை 2023-இல் கூறுகிறது .மேலும் 2011-இல் 24 கோடியாக இருந்த போதைப் பழக்கம் கொண்டவர்களின் எண்ணிக்கை 2021-இல் 29.6 கோடியாக உயர்ந்துள்ளது. போதைப்பொருட்களினால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு, மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. இதனால் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் போதைப்பொருட்களின் ஊடுருவல் வேரறுக்க முடியாத விருட்சமாக வளர்ந்து வருகிறது.

கல்வி நிறுவனங்களில் ஊடுருவும் போதைப்பொருட்கள்

போதைப்பொருள் பயன்பாடு நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மாணவர் சமூகம் மத்தியில் ஒரு மோசமான சுகாதார நெருக்கடியை உருவாக்கி உள்ளது. சமீப காலமாகப் போதைப்பொருள் துஷ்பிரயோகம் அதிகரித்துவரும் அபாயமாக மாறி வருகிறது. மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் புகையிலை மற்றும் போதைப்பொருட்களால் அதிகம் ஈர்க்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது ஆரோக்கியமான இளம் சிறார்களில் கணிசமான அளவு இந்த தேவையற்ற நடவடிக்கைகளுக்கு அடிமையாகி விடுகின்றனர். இதனால் அவர்களின் சொந்த நலவாழ்விற்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படுத்திவருகிறது. அதே நேரத்தில் அவர்களின் குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் சொல்லொணாத் துயரத்தையும் உருவாக்குகிறது.

போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு

இளைஞர்கள் வாழ்வைச் சீரழிக்கும் போதைப்பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, ‘போதைப்பொருள் இல்லாத் தமிழ்நாடு’ என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் சுமார் 20,000க்கும் மேற்பட்ட போதைக்கு எதிரான மாணவர் குழுக்கள் (ANTI DRUG CLUBS) மூலம் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் எதிர்ப்பு குழு

போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போதைப்பொருள் பயன்பாட்டினைத் தடுத்தல் மற்றும் நமது மாணவர்களிடையே போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன் முயற்சியே போதைப்பொருள் எதிர்ப்பு குழு தொடக்கம்.

போதைப்பொருள் எதிர்ப்பு குழுவின் நோக்கங்கள்

*போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல்.
*போதைப்பொருள் இல்லாத வளாகத்தை உறுதிசெய்தல்.
*மாணவர்களை போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் தன்னார்வலராக மாற்ற ஊக்குவித்தல்.
*புகையிலை போன்ற சட்டவிரோத போதைப் பொருட்களை நிராகரிக்க இளைஞர்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் செயல்படுத்துதல்.
*போதைப்பொருட்கள் பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் அவ்வப்போது பயன்படுத்துபவர்களை முற்றிலுமாக நிறுத்துவதற்கு ஊக்குவித்தல்.

அமைப்பு முறை

ஒவ்வொரு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையோடு இணைந்து போதைப்பொருள் எதிர்ப்புக் குழு உருவாக்குதல்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்புக் குழு

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேர், போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற பொறுப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர், தேசிய மாணவர் படை அலுவலர் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து அருகில் உள்ள காவல்துறையின் இரண்டு பிரதிநிதிகளைக் கொண்டு ஒரு உயர்நிலைப்பள்ளி போதைப்பொருள் எதிர்ப்புக் குழு செயலாற்ற வேண்டும்.

பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேர், போதைப்பொருள் எதிர்ப்பு மன்றப் பொறுப்பாசிரியர், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர், தேசிய மாணவர் படை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் அருகில் உள்ள காவல்துறையின் இரண்டு பிரதிநிதிகளைக் கொண்டதாக மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்.

கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்புக் குழு

மாணவர் பிரதிநிதிகள், போதைப்பொருள் எதிர்ப்பு மன்றப் பொறுப்பாசிரியர், பேராசிரியர்கள், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள், தேசிய மாணவர் படை அலுவலர், உடற் கல்வித்துறைத் தலைவர் மற்றும் காவல்துறை பிரதிநிதிகள் கொண்டதாகக் கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் எதிர்ப்பு குழுவின் குறிக்கோள்

போதைப்பொருள் எதிர்ப்பு குழுவின் பிரதான குறிக்கோள் ‘போதைப்பொருள் வேண்டாம் என்று சொல்லுங்கள்’ (SAY NO TO DRUGS), ‘வாழ்க்கைக்கு ஆம் என்று சொல்லுங்கள்’ (SAY YES TO LIFE) என்பதே ஆகும்.

செயல்பாடுகள்

*ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று காலை வணக்கக் கூட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வைத்தல் மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகள் செய்தல்.
*பள்ளி, கல்லூரி வளாகத்திற்குள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் புகையிலை மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தல்.
*போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி நடத்துதல்.
*போதைப்பொருட்களினால் அதிர்ச்சியூட்டும் வகையில் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் குறித்து சுவரொட்டிகள், விளக்கக் கண்காட்சி நடத்துதல்.
*கல்லூரி வளாகத்திற்குள், விடுதிகளில் போதைப்பொருள் தடுப்புக் குழு தொடர்ந்தும், திடீரெனவும் சோதனை மேற்கொள்ளுதல்.
*போதைப்பொருள் கிடைப்பது தொடர்பான தகவல்களை உள்ளூர் காவல் நிலையத்தில் தெரிவித்தல்
*போதைப்பொருள் விழிப்புணர்வு சம்பந்தமாக ஓவியம், இசை, பாட்டு ஸ்லோகன் எழுதுதல், கட்டுரை, ஓரங்க நாடகம், குறும்படம் எடுத்தல் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்துதல்.
*அவ்வப்போது அரசு மற்றும் காவல்துறையினரால் வெளியிடப்படும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான வீடியோ படக் காட்சிகளை மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டுதல்.
*காவல்துறை அதிகாரிகளை அவ்வப்போது பள்ளி மற்றும் கல்லூரிக்கு அழைத்து போதைப்பொருள் எதிர்ப்புக் குழு சார்பாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துதல்.
*போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதைப் பொருள் வைத்திருப்பவருக்கு அல்லது விற்பனை செய்பவருக்கு அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து எடுத்துக் கூறுதல்.
*மருத்துவர்களை அழைத்து போதைப் பழக்கத்தால் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகள் மற்றும் அதைச் சார்ந்த பிரச்னைகள் குறித்து விளக்கம் அளிக்கச் செய்தல்.
*மனநல மருத்துவர்களை அழைத்து போதையின் பாதையில் வாழ்வைத் தொலைத்தவர்களின் வாழ்வியல் பிரச்னைகளை எடுத்துக்கூறுதல்.
*ஆண்டுதோறும் ஜூன் மாதம் 26ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு தினத்தைப் பொருத்தமான செயல்பாடுகளுடன் சிறப்பாக நடத்துதல்.

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களைத் தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத்துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்பவையே போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி.

போதைப் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள்

கற்றலில் ஆற்றல் அனைத்தையும் இழத்தல், பெற்றோர்கள் அரவணைப்பு குறைதல், உடல்நலம் கெடுதல், சுய பொறுப்புகளைப் புறக்கணித்தல், குற்றச் செயலில் ஈடுபடுதல், நேர விரயம் ஏற்படுதல், புற்றுநோய்கள் வருதல், குடும்ப உறுப்பினர்களால் நண்பர்களால் ஒதுக்கப்படுதல் போன்ற மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஆகவே ‘போதை அது அழிவின் பாதை’ என்பதை மாணவர்களின் மனதில் பசுமரத்தாணி போலப் பதிவு செய்தல் வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை அறவே ஒழிக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குவோம்.

‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்கின்ற இலக்கை விரைவில் எட்டிடுவோம். ஆரோக்கியமான மாணவர் சமுதாயம் அமைய அல்லும்பகலும் அயராது பாடுபடுவோம்.

The post பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு குழு செயல்பாடுகள் appeared first on Dinakaran.

Read Entire Article