
கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசுவாமி. கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி சரசுவதி (வயது 54). இந்த தம்பதிக்கு இந்துமதி (25) என்ற மகளும், ஒரு மகனும் உண்டு.
இந்துமதி எம்.எஸ்.சி., பி.எட். முடித்து விட்டு பக்கத்து ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். திருமணமாகவில்லை. இவரது அண்ணனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இதனிடையே, குடும்ப பிரச்சினை காரணமாக இந்துமதி மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனால் கடந்த 2 மாதங்களாக இந்துமதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்துமதி தூங்குவதற்காக தனது அறைக்குள் சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் தாய் சரசுவதி அவரது அறைக்குள் சென்று பார்த்தார். அங்கு இந்துமதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் ஆசிரியையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.