
சென்னை,
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வந்த பனிப்போர் நேற்று பகிரங்கமாக வெடித்தது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என்றும் பொதுக்குழுவை கூட்டி அவரை நீக்குவேன் என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். தைலாபுரத்தில் நா தழுக்கதழுக்க ராமதாஸ் அளித்த பேட்டி பாமகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந் நிலையில், உட்கட்சி மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்திருக்கும் சூழலில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களை உள்ளிட்டோரை இன்று சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, பா.ம.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் வருகை தந்துள்ளனர். அன்புமணி வருகை தந்த போது பாமக தலைவர் என கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பாமகவை அன்புமணி ராமதாஸ் கையில் எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.