எங்கும் வியாபித்திருக்கும் சக்தியை கோயிலில் நாம் பெறுவதற்காகவே நாம் வழிபாட்டிற்காக கோயிலுக்குச் செல்கிறோம். ஒவ்வொரு சக்தியும் ஒவ்வொரு கிரகங்களுடன் தொடர்பு கொண்டு நம்மை பிரபஞ்சத்துடன் இணைக்கிறது. இந்த இணைவானது ஒரு இயக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாரத்திற்கான கோயிலை காண்போம்…
ஒருமுறை அம்பிகை சிவனாரிடம் பூவுலகில் பிறந்த மனிதர்கள் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு ஆகிய நான்கையும் பெறுவதற்காக எங்கு வழிபட வேண்டும் எனக் கேட்கவே. இக்கேள்விக்கு சிவபெருமான் அடையாளம் காட்டி ஆற்றுப்படுத்திய மலைதான் பர்வதமலை ஆகும். திருமாலின் கர்வத்தை போக்க சிவபெருமான் ஜோதி ஸ்வரூபம் கொண்டு வந்த பொழுது தனது முதல் பாதத்தை வைத்த மலைதான் பர்வதமலை. அவரின் அடுத்த பாதத்தை வைத்த அடிதான் திருவண்ணாமலை.
ஹனுமான் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்றபொழுது அதில் இருந்து விழுந்த ஒரு பகுதிதான் பர்வதமலை என புராணங்கள் கூறுகின்றன. இதனை தென் கயிலாயம் என்று அழைக்கிறார்கள். இந்த பர்வதமலையை ஒருமுறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என நம்பப்படுகிறது.
இங்கு பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் ஜோதி ஏற்றப்படுகிறது. பதினெட்டுச் சித்தர்களும் இங்கு வந்து வழிபடுவதாக நம்பப்படுகிறது.
இந்த மலையானது மொத்தம் மூவாயிரம் படிக்கட்டுகளைக் கொண்டது. இதில் செங்குத்தான படிகள் மற்றும் கடப்பாரைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளை இணைந்துள்ள அதிசய மலையாகும். ஏகப்பட்ட சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது.
தொடர்ந்து 48 பௌர்ணமி, அமாவாசை அன்று இங்குள்ள சிவ-சக்தியினை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் உண்டாகும் எனச் சொல்லப்படுகிறது.
பிரம்மாம்பிகை சமேத மல்லிகா அர்ஜுனன் உடனுறை இத்தெய்வத்திற்கு சூரியன், செவ்வாய், குரு, சந்திரன், சுக்ரன் ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளன.
அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் மலைமீது ஏறி வழிபட்டு வந்தால் வாழ்வில் நல்ல திருப்பங்கள் உண்டாகும்.
செவ்வாய்க்கிழமை வரும் பௌர்ணமி நாளில் சென்று வழிபட்டால் வாகன யோகம் மற்றும் வீடு யோகங்கள் உண்டாகும்.
வெள்ளிக்கிழமை வரும் பௌர்ணமி நாளில் வழிபட்டால் திருமணத்தடை விலகி வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மலையேறி தங்கி வழிபட்டு திரும்பி வரும் பொழுது கறுப்பு நிறப் பசுவிற்கு உணவு கொடுத்தால் சொத்துப் பிரச்னை தீரும்.
மீன லக்னக் காரர்கள் திங்கட்கிழமை வரும் பௌர்ணமி நாளில் மலையில் தங்கி வழிபட்டு திரும்பி வரும் பொழுது நெல்லிக்கனி கன்று வாங்கி வீட்டில் வளர்த்து வந்தால் குபேர சம்பத்து உண்டாகி ஐஸ்வர்யங்கள் பெருகும்.
புதன்கிழமை வரும் பௌர்ணமி நாளில் மலைமீது தங்கி வழிபட்டால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
புதன்கிழமை அல்லது ரோகிணி நட்சத்திரத்தன்று வரும் பௌர்ணமி அன்று மலையில் தங்கி வழிபட்டு வந்தால் ஆட்டிசம் பிரச்னைகள் இருந்தால் தீர்வுகள் கிடைக்கும்.
வியாழக்கிழமையில் வரும் பௌர்ணமி நாளில் மலையில் தங்கி வழிபட்டால் ஐஸ்வர்யம் பெருகி குபேர சம்பத்து உண்டாகும். இந்த மலையானது குபேரனுக்கு வரம் அளித்த பர்வதமலை. அம்பாள் இந்த மலையில் தவம் இருந்து அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றைப் பெற்ற மலையில் உள்ள திருத்தலமாகும்.
கோயிலுக்கு எப்படிச் செல்வது?
திருவண்ணாமலைக்குச் சென்று அங்கிருந்து கலசப்பாக்கம் – தென்மகா மங்கலம் சென்று அங்கிருந்து அடிவாரம் வரை நடந்து சென்று மேலேறும் படிக்கட்டுக்களை அடையலாம்.
The post பர்வதமலை ஸ்ரீ பிரம்மாம்பிகை சமேத ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி appeared first on Dinakaran.