
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட வாடிப்பட்டி-கொடைரோடு இடையே உள்ள பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் அந்த பாதையில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் (வ.எண்.16848) வருகிற 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்கிறது. இதற்காக இந்த ரெயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.
மறுமார்க்கத்தில் மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில் (வ.எண்.16847) இன்று (புதன்கிழமை), வருகிற 8-ந் தேதி மற்றும் 11-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்தடையும். இந்த ரெயில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கன்னியாகுமரி-சரளப்பள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண். 07229) வருகிற 6-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்கிறது. இந்த ரெயில் மானாமதுரை மற்றும் காரைக்குடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12666) வருகிற 7-ந் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரெயில் மானாமதுரை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மாதா வைஷ்ணவதேவி கத்ரா-நெல்லை வாராந்திர ரெயில் (வ.எண்.16788) நாளை (வியாழக்கிழமை) மற்றும் 12-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்தடையும். இந்த ரெயில் புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல, கோவை-நாகர்கோவில் ரெயில் (வ.எண்.16322) வருகிற 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மதுரை-கச்சிக்குடா வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.07192) இன்று (புதன்கிழமை) மற்றும் 11-ந் தேதி ஆகிய நாட்களில் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு பதிலாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.