பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள ஏகனாபுரம் கிராமத்தில் கட்டிட சீரமைப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தங்கள் கிராமத்தில் உள்ள பழுதடைந்த நியாய விலைக் கடையை அவர்களே சரி செய்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் 5476 ஏக்கர் பரப்பளவில் பசுமை வழி விமான நிலையம் அமைய உள்ளது.
மொத்தம் 13 கிராமங்களில் இருந்து இந்த விமான நிலையத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த நிலங்களில் நீர்நிலைகள், ஏரி, குளங்கள், விவசாய நிலங்கள், வீடுகள், அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்டவை அடக்கம். இந்த விமான நிலையத்துக்காக நிலம் எடுக்கப்படும் கிராமங்களில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதுமாக கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்த கிராமத்தை மையமாக வைத்து ஆயிரம் நாளை கடந்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.