சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த உப்பூரைச் சேர்ந்த முனியப்பன் என்ற விவசாயி, அவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் ஏற்பட்ட இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் பெய்த மழையில் 3 முறை பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஒரு முறை மட்டும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதுவும் இன்றுவரை வழங்கப்படவில்லை. மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும் போது, அவற்றுக்கு இழப்பீடு வழங்க நடைமுறைக்கு ஒவ்வாத விதிமுறைகளை பின்பற்றாமல், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கும் வகையில் நிலையான நிவாரணத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியும். மேலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயி முனியப்பனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பயிர் சேதமடைந்ததால் விவசாயி தற்கொலை இழப்பீடு வழங்குவதற்கு நிலையான நிவாரணத் திட்டத்தை உருவாக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.