பத்திரிகையாளர் நல வாரிய கூட்டம்- நலத்திட்ட உதவிகளுக்கு ஒப்புதல்

7 months ago 24

சென்னை,

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தலைமைச் செயலகத்தில், பத்திரிகையாளர் நல வாரியத்தின் எட்டாவது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

பத்திரிக்கையாளர் நலவாரியத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமசடங்கு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்கு இக்கூட்டத்தில் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும், மஜீத்தியா கமிட்டி- ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்றும், அந்நிறுவனங்களின் பரிந்துரையின் அடிப்படையில் அப்பணியாளர்களை பத்திரிகையாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்திடவும் இக்கூட்டத்தில் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொருண்மைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் ச.செல்வராஜ், வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் சிவந்தி ஆதித்தன் பாலசுப்பிரமணியன், பி.கோலப்பன், எஸ்.கவாஸ்கர், எம்.ரமேஷ், லெட்சுமி சுப்பிரமணியன், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் செய்தித் துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read Entire Article