பட்டதாரிகளுக்கு 3வது பட்டமளிப்பு விழா

4 months ago 10

தஞ்சாவூர், பிப்.14: உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டதாரி மாணவர்களுக்கான 3 வது பட்டமளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் உணவு பதப்படுத்தும் தொழில் துறை ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: நெல் உற்பத்திக்கு பெயர் பெற்ற வளமான காவிரி டெல்டாவில் அமைந்துள்ள நிப்டம் இந்தியாவின் உணவுத் தொழில் மேம்பாட்டுக்கு ஆதரவாக உள்ளது. உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான உணவுகளை தயாரிப்பதிலும் தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.

உலகின் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்கி வருகிறது. உணவு பதப்படுத்தும் தொழில் விவசாயத்தையும், தொழில்துறையையும் இணைத்து விவசாயிகளின் மேம்பாட்டிற்கும் நுகர்வோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கும் உதவுவதாக அமைய வேண்டும். ஒன்றிய அரசு 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மற்றொரு நிப்டம் நிறுவனம் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதிநவீன ஆராய்ச்சி மூலம் உணவு தொழில்துறை வளர்ச்சிக்கு நிறுவனங்களின் வலுவான கூட்டமைப்பு, எதிர்காலத்திற்குத் தேவையான உணவு சுற்றுச்சூழல் அமைப்பதே ஒன்றிய அரசின் நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிப்டம் நிர்வாகக் குழு தலைவர் சோதி முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கும், நிப்டம் இயக்குநர் பழனிமுத்து இளநிலை பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களை வழ்ஙகி பேசினர்.

இதில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள், இளநிலை முடித்த 60 பேர், முதுகலை முடித்த 28 பேர், உணவுத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் முடித்த 2 பேர் என மொத்தம் 90 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பதிவாளர் பொறுப்பு சண்முகசுந்தரம் நன்றி கூறினார். முன்னதாக ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் நிப்டம்-ன் உணவு பதப்படுத்தும் வணிக தொழிற்பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.

The post பட்டதாரிகளுக்கு 3வது பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Read Entire Article