
திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த மாலமேடு கிறிஸ்டியன் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 70). உடல் நிலை சரியில்லாத இவர் வீட்டில் சத்தமிட்டுக்கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இவரது மகன் ராஜகோபால் (40). இவருக்கு திருமணமாகவில்லை.
தாயும், மகனும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ராஜகோபால் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மேலும் அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் தினமும் மது குடித்து விட்டு வந்து தயாரிடம் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு உடல்நல பாதிப்பால் மாரியம்மாள் சத்தமிட்டுக்கொண்டிருந்தார். அப்போது வெளியில் சென்று மதுபோதையில் வந்த ராஜகோபாலுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் தாயாரிடம் ராஜகோபால் வாக்குவாதம் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜகோபால் கத்தியால் மாரியம்மாளின் கழுத்தை அறுத்து விட்டு ஓடிவிட்டார். இதனால் மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இது குறித்து மூலனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது மாரியம்மாள் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.