
நாகர்கோவில்,
நவீன காலக்கட்டத்திற்கு ஏற்ப சமூக வலைதளங்கள் உலகில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக இளம்வயதினர் கையில் உயர்ரக செல்போன்களை வைத்து கொண்டு அதில் 'ரீல்ஸ்' எடுத்து, அதனை தங்களது சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்டவற்றில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாகர்கோவில்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாகர்கோவிலை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படிக்கட்டில் நின்று நடனமாடி எடுத்த 'ரீல்ஸ்' ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது நாகர்கோவிலை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஓடும் ரெயிலின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கிறார்.
அத்துடன் இந்தி பாட்டு ஒலிக்க அவர் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான முறையில் பாடலுக்கு ஏற்ப நடனமாடுகிறார். ரெயிலின் கைப்பிடி கம்பிகளை பிடித்து தொங்கியபடி சாய்ந்து தலை மற்றும் கை, கால்களை நீட்டியபடி ஆடுகிறார். இதனை மற்றொருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோ 2 நிமிடம் ஓடுகிறது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பேராபத்தை உணராமல் 'ரீல்ஸ்' மோகத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணுக்கு எதிராக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.