திருப்பூர், ஜூன் 5: இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியமானதான பக்ரீத் பண்டிகை வருகின்ற 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் சுபமுகூர்த்த தினங்கள், திங்கட்கிழமையான 9ம் தேதி வைகாசி விசாகம் உள்ளிட்ட தொடர் பண்டிகைகள் வரவுள்ளது. இதற்காக வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை முதல் திருப்பூரில் உள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும், திருப்பூரைச் சேர்ந்தவர்கள் கோவில் மற்றும் திருவிழாக்களுக்கு செல்வது வழக்கம்.
பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் பயணத்தை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் இருந்து வெளியூர் சென்று வருபவர்களுக்கு வசதியாக வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது.
திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக 40 சிறப்பு பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக 20 சிறப்பு பேருந்துகள் மற்றும் திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கோவை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை காட்டிலும் கூடுதலாக 15 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாக திருப்பூர் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பக்ரீத், வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து appeared first on Dinakaran.