விருத்தாசலம், ஜூன் 7: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடந்து வருகிறது. இங்கு ஆடுகள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வேப்பூரை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வந்து தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதில் காலை 10 மணி வரை ஆடு விற்பனையும், அதன் பிறகு நாள் முழுவதும் காய்கறி விற்பனையும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வாரத்திற்கான வாரச்சந்தை நேற்று அதிகாலை நடந்தது. இதில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் ஆடு விற்பனை நடைபெற்றது. இதில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு செம்மறி ஆடுகள், குறும்பை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதிக விலைக்கு ஆடுகள் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் சந்தையில் ஆடுகள் அமோக விற்பனை appeared first on Dinakaran.