மேலூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மேலூர் வாரச் சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாகின. மதுரை மாவட்டம், மேலூர் சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் மாடு, திங்கட்கிழமையில் ஆடு மற்றும் கோழிகள் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாட்டுசந்தையும், நேற்று ஆட்டுச்சந்தையும் களைகட்டியது. ஞாயிறன்று மாடுகளின் விற்பனை ஓரளவுக்கே இருந்த நிலையில், நேற்று ஆடுகளின் விற்பனை கன ஜோராக நடைபெற்றது. ஆடுகளை வாங்க மதுரை மாவட்டம் மட்டுமின்றி, திண்டுக்கல், விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர்.
வழக்கமாக சந்தையில் ஆடுகள் சராசரியாக ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும் ஆடுகள் நேற்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையாகின. பெரிய ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. இரு தினங்களிலும் சேர்த்து ரூ.2 கோடிக்கு மேல் கால்நடைகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post பக்ரீத் பண்டிகையால் களைகட்டிய மேலூர் வாரச்சந்தை ரூ.2 கோடிக்கு கால்நடை விற்பனை appeared first on Dinakaran.