புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை 2014ம் ஆண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்து 2015ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 13ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பெயரையும் அதில் அமலாக்கத்துறை இணைத்துள்ளது.
இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தெரிவித்தப்படி விடுபட்ட ஆவணங்கள் தற்போது சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து அதனை ஆய்வு செய்வதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.