வேலூர்: வேலூர் மாவட்ட பாஜ தலைவர் உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் விலகியுள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜவில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக உள்குத்து அரசியல் நடந்து வருகிறது. முதலில் மாநில அளவில் இருந்து வந்த உள்குத்து, தற்போது மாவட்டம், நகரம் என கீழ்நிலை அளவுக்கு சென்றுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜவில் புதிய மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. இதில் மாவட்ட தலைவர்கள் பட்டியல் நேற்று மாலை வெளியானது.
ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் மாவட்ட பாஜ தலைவர் தயாசங்கர், பொதுச்செயலாளர் வேல்ஆறுமுகம் ஆகியோர் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதேபோல் தற்போது வேலூர் மாவட்ட பாஜவிலும் அதிருப்தி குரல் எழுந்துள்ளது. வேலூர் மாவட்ட பாஜ தலைவர் பதவிக்கான போட்டியில் 3 பேர் களத்தில் இறங்கினர். இதில் ஏற்கனவே 2 முறை மாவட்ட பாஜ தலைவர் பதவி வகித்த தசரதன் மீண்டும் மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட உள்ளதாக நேற்று காலை செய்திவெளியாகி உள்ளூர் பாஜவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அவர் மாவட்ட பாஜ தலைவராக நேற்று மாலை அறிவிக்கப்பட்டார். இதனால், தற்போது மாவட்ட தலைவர் பொறுப்பில் உள்ள மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் எஸ்.எல்.பாபு, எம்.ஜெகநாதன், சி.மகேஷ்குமார், மாவட்ட பொருளாளர் என்.தீபக் ஆகிய 5 பேர் மாவட்ட தலைவர் நியமனத்தில் தங்களுக்கும், கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்களுக்கும் முழுமையான உடன்பாடு இல்லை.
ஏற்கனவே 2 முறை பொறுப்பில் இருந்த அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக நடந்து கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தவர். அவரை மீண்டும் தலைவராக நியமிப்பதில் உடன்பாடு இல்லாததால் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து, அதற்கான கடிதத்தை மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘கட்சிக்காக உழைக்கக்கூடிய யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரலாம். கட்சிக்கு குந்தகம் விளைவித்து, வளர்ச்சிக்கு தடையாக செயல்பட்டவரை எப்படி ஏற்பது? எங்களுடைய குரலுக்கு கட்சி செவிசாய்க்கும் என்று நம்புகிறோம். முழுமையான பட்டியல் வெளியான பிறகு எங்களின் நிலையை அறிவிப்போம்’ என்றனர்.
The post நெல்லை மாவட்டத்தை தொடர்ந்து வேலூர் பாஜ நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகல்: புதிய மாவட்ட தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.