
நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 3 நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழையாகவும், மலை அடிவார பகுதியில் சாரல் மழையாகவும் தொடர்ந்து பெய்தது. நெல்லை மாநகர பகுதியிலும் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.
தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் பிரதான அணையான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று மேலும் சுமார் 3 அடி உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 83 அடியில் இருந்து 85.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 2,363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 300 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 98.36 அடியாக இருந்தது. நேற்று 3.18 அடி உயர்ந்து 101.54 அடியாக நீர்மட்டம் இருந்தது.
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.99 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 51 கன அடியாகவும், வெளியேற்றம் 45 கன அடியாகவும் உள்ளது.
ராமநதி அணை
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 2.20 அடி உயர்ந்து 39 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 87 கன அடி, வெளியேற்றம் 20 கன அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 48 அடியாக உள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 32 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 3 அடி உயரந்து 18 அடியாகவும், அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 37 அடியாகவும் உள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்து வருவதும், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.