
சென்னை,
நெல்லை- செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 6.20 மணிக்கு நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் ரெயிலில் ராபர்ட் புரூஸ் எம்.பி. பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பயணிகள் கூறுகையில், தற்போது 14 பெட்டிகளுடன் இணைக்கப்படும் ரெயிலை 20 பெட்டிகளாக இயக்க வேண்டும், அதில் பெண்களுக்கு என்று 2 பெட்டிகள் ஒதுக்க வேண்டும் என்றனர். கல்லிடைக்குறிச்சி வரையிலும் ரெயிலில் பயணித்து பயணிகளிடம் எம்.பி. குறைகேட்டார். பின்னர் அவர், இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ரெயில்வே மந்திரியை சந்தித்து நெல்லை -செங்கோட்டை இடையிலான பாசஞ்சர் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்று உறுதி அளித்தார்.
இந்த நிலையில், நெல்லை - செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயிலின் பெட்டிகள் எண்ணிக்கையை 12ல் இருந்து 16 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த தெற்கு ரெயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் நெல்லை எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.