நெல்லை அருகே நெல் அறுவடை இயந்திரம் கவிழ்ந்து முதியவர் பலி

3 hours ago 2

*டிரைவர் படுகாயம்

பேட்டை : நெல்லை அருகே நெல் அறுவடை இயந்திரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவர் பலியானார். டிரைவர் படுகாயம் அடைந்தார். நெல்லை அருகே கோபாலசமுத்திரம் பிராஞ்சேரியை சேர்ந்தவர் பாபநாசம் மகன் சசிகுமார் (48).

இவர் சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவராக கோபாலசமுத்திரம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முருகேசன் (35) என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் முருகேசன் கோபாலசமுத்திரம் பகுதியில் உளுந்து அறுவடை பணியை முடித்துள்ளார்.

பின்னர் நரசிங்கநல்லூர் பகுதி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சன்னியாசி (75) என்பவர் தனது வயலில் உளுந்து அறுவடைக்காக முருகேசனை அழைத்துச்சென்றுள்ளார்.
நெல் அறுவடை இயந்திரமானது கோபாலசமுத்திரம் சாலை நரசிங்கநல்லூர் குளத்து மடை அருகே சென்றபோது வாகனத்தின் டயர் கட் ஆகி வயல்வெளியில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி சன்னியாசி மற்றும் டிரைவர் முருகேஷ் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சன்னியாசியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த முருகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லை அருகே நெல் அறுவடை இயந்திரம் கவிழ்ந்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article