
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பிதிர்காடு அருகே சந்தகுன்னு பகுதியை சேர்ந்தவர் ஜோய் (வயது 60), தொழிலாளி. இவர் இரவு 7.30 மணிக்கு பிதிர்காடு பஜாரில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருட்டில் நின்றிருந்த காட்டு யானை திடீரென ஜோயை தாக்கியது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு காட்டு யானையை விரட்டினர்.
தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் (பொறுப்பு) அய்யனார், வனவர்கள் சுதீர், சுரேஸ்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த ஜோயை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அம்பலமூலா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஸ்லீன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.