"நீதிமன்ற ஆணையை வேண்டுமென்றே மீறவில்லை" - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

11 hours ago 2

சென்னை,

சென்னை ராயபுரத்தில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கடந்த 2021-ம் ஆணடு டிசம்பர் மாதம் ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் மாநகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்காததால் அவருக்கு எதிராக வக்கீலும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் என்பவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் மாநகராட்சி கமிஷனருக்கு அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தமிழக அரசின் கூடுதல் தலைமை அரசு வக்கீல் ரவீந்திரன் முறையிட்டார். இந்த விவகாரத்தில், எங்கள் தரப்பில் தான் தவறு இருப்பதாக அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 'வக்கீல்கள் தவறான பிரமாண பத்திரத்தை கொடுத்திருந்தாலும் அதனை மாநகராட்சி கமிஷனர் படித்து பார்த்து கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர் கமிஷனராக இருக்கவே தகுதியில்லாதவர்' என கூறினார். மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என நினைக்கிறாரா? நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் காட்டினால் என்னவாகும்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் ஏன் ஆஜராகவில்லை என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, உரிய பிரமாண பத்திரத்துடன் நாளை (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார். அபராதம் குறித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்த தலைமை நீதிபதி, விசாரணையை இன்று (வியாழக்கிழமை) தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆஜரானார். அப்போது, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை என்றும், நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாகவும் அவர் தலைமை நீதிபதி அமர்வில் தெரிவித்ததை அடுத்து ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை சென்னை ஐகோர்ட்டு திரும்பப் பெற்றுக்கொண்டது.



Read Entire Article