நீதிபதியின் மகள் எனக்கூறி மிரட்டல் உதவி, துணை கமிஷனர் அலுவலகத்தில் பணம் பறித்த பெண் காவலர் கைது: விடுதிகளில் அறை எடுத்து உல்லாசமாக இருந்ததும் அம்பலம்

4 hours ago 2

சென்னை: செம்பியம் காவல் நிலையத்திற்கு கடந்த 5ம் தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர், ‘நீதிபதி ஒருவரின் பெயரை கூறி, நான் அவரது மகள் பேசுகிறேன். பெரம்பூர் ரயில்வே நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வந்தேன். வரும்போது பணம் கொண்டு வரவில்லை. இங்கு சாப்பிட்டதற்கான ரூ.1500 ரூபாயை செலுத்தி விடுங்கள்,’ என சற்று அழுத்தமான குரலில் கூறியுள்ளார்.

உடனே காவல் நிலையத்தில் இருந்த போலீசாரும், போனில் பேசியது நீதிபதியின் மகள் என நினைத்து ஓட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டு, ‘நாங்கள் பணத்தை கொடுத்து விடுகிறோம்,’ என கூறியுள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணும் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர், போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று பணத்தை கொடுத்துள்ளனர். அதன் பிறகு மீண்டும் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அதே பெண், புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, ‘நான் நீதிபதியின் மகள் பேசுகிறேன்.

எனக்கு பெரம்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தர வேண்டும்,’ என கூறியுள்ளார். அதற்கு துணை கமிஷனர் அலுவலகத்தில் இருந்தவர்கள், ‘அதையெல்லாம் நாங்கள் ஏற்பாடு செய்து தர முடியாது,’ எனக்கூறி போனை வைத்து விட்டனர். இதனால் அந்த பெண் மீண்டும் செம்பியம் உதவி கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, ‘‘நான் நீதிபதி மகள் பேசுகிறேன். பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் எனக்கு அறை ஏற்பாடு செய்து தர வேண்டும்,’ என கூறியுள்ளார்.

அதற்கு போலீசார், ஏற்கனவே உங்களுக்கு ஓட்டலில் சாப்பிட்டதற்கு பில் கொடுத்து உள்ளோம். இப்போது ஓட்டலில் அறை எடுத்து தருமாறு கூறுகிறீர்கள். அவ்வாறு செய்ய முடியாது,’’ எனக்கூறி போனை வைத்து விட்டனர். இதனையடுத்து அந்த பெண், ‘‘ஒரு நீதிபதியின் மகளுக்கு இதை கூட செய்ய மாட்டீர்களா. எனது தந்தையிடம் இதுபற்றி தெரிவித்தால், நடப்பதே வேறு,’ என்று மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

பின்னர், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கிய அவர், மீண்டும் செம்பியம் போலீசாரை தொடர்பு கொண்டு, ‘‘அந்த ஓட்டலில் நான் அறை எடுத்து தங்கி விட்டேன். எனக்கு தேவையான உணவுகளை கூறுகிறேன். அதை தயார் செய்யுங்கள்,’’ என கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், இதனை செம்பியம் உதவி கமிஷனர் முகேஷ் ஜெயக்குமார் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

பேசிய நபர் பெண் என்பதால் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபனா மற்றும் பெண் போலீசார் இதனை நேரில் சென்று விசாரிக்கும்படி உதவி கமிஷனர் உத்தரவிட்டார். இதனையடுத்து குறிப்பிட்ட பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள ஓட்டலுக்கு சென்ற பெண் இன்ஸ்பெக்டர் ஷோபனா, போனில் பேசிய அந்த பெண்ணிடம் விசாரணை செய்தார். அப்போதும் அந்த பெண், நான் நீதிபதியின் மகள், என்று கூறியுள்ளார். பிறகு அவரது ஐடி கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை கைப்பற்றி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

இதனால், அந்த பெண்ணை செம்பியம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அந்த பெண் கொளத்தூர் அகரம் சிதம்பரம் தெருவை சேர்ந்த ரேகா (42) என்பதும், இவர் கடந்த 2019ம் ஆண்டு பெண் காவலராக பணியில் சேர்ந்து கடைசியாக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்ததும், கடந்த 6 மாதங்களாக இவர் வேலைக்கு செல்லவில்லை என்பதும் தெரியவந்தது.

இவருக்கு திருமணமாகி பொன்ராம் என்ற கணவரும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பொன்ராம் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து, வீட்டில் கோமா நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், ரேகா கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் அவ்வப்போது ஆங்காங்கே உள்ள காவலர்களை மிரட்டி, பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இவர், உயர் நீதிமன்ற பணியில் இருந்தபோது அரசு வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கிடைத்துள்ளது.

அதனை பயன்படுத்தி நேரடியாக உதவி கமிஷனர் மற்றும் துணை கமிஷனருக்கு போன் செய்யாமல் அவர்களது அலுவலகத்திற்கு போன் செய்து அங்கு பணிபுரியும் காவலர்களிடம் தான் நீதிபதியின் மகள் என்று கூறி அவ்வப்போது ஓட்டல்களில் ரூம் எடுத்து, தனது ஆண் நண்பர்களுடன் தங்குவது மற்றும் ஓட்டல்களில் சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள துணை கமிஷனர் அலுவலகம் மற்றும் உதவி கமிஷனர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு போன் செய்து பில் செட்டில் செய்து வந்துள்ளார்.

இந்த முறையும் செம்பியம் காவல் நிலையத்திற்கு போன் செய்து ஒருமுறை பில் செட்டில் செய்தவுடன் மீண்டும் மறுமுறை ரூம் போட்டு தருமாறு கூறி தொல்லை கொடுத்து வந்ததும். அவர்கள் முடியாது என்று கூறியதும் அசைவ உணவு ஆர்டர் செய்து அதற்கு பில் கொடுக்கும்படி கூறியதும் தெரியவந்தது. இதனையடுத்து ரேகா மீது வழக்குப்பதிவு செய்த செம்பியம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார்.

* விட்டோடி காவலர்
கைது செய்யப்பட்ட பெண் காவலர் ரேகா கடந்த 6 மாதமாக எந்த ஒரு தகவலையும் சொல்லாமல் தொடர்ந்து காவல் பணிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். ஒரு நபர் எந்த ஒரு காரணமும் சொல்லாமல் தொடர்ந்து 21 நாட்கள் விடுப்பு எடுத்தால் அவர் விட்டோடி எனப்படும் பிரிவில் வைக்கப்படுவார்.

அவருக்கு காவல் துறையிலிருந்து சம்பளம் வழங்கப்படாது என கூறப்படுகிறது. தற்போது பெண் காவலர் ரேகாவும் அந்த விட்டோடி பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கடைசியாக அவர் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்ததால், பூக்கடை துணை கமிஷனர் ரேகாவை பணியிடை நீக்கம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* போலீஸ் என்பதை மறைத்தார்
போலீசார் ரேகைவை லாட்ஜில் வைத்து விசாரித்தபோது, நீதிபதியின் மகள் என கூறியுள்ளார். பிறகு போலீசார் ரேகாவின் போலீஸ் ஐடி கார்டை எடுத்து அதை காண்பித்து கேட்டபோது. அது நான் இல்லை வேறு ஒருவர் எனக் கூறியுள்ளார். அதன்பிறகு அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது தான் ஒரு போலீஸ் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார். அப்போதும் தொடர்ந்து நீதிபதியின் மகள் என கூறியுள்ளார்.

இதனால் போலீசார் ஒரு அச்ச உணர்வுடனே விசாரணை நடத்தினர். அதன் பின்பு அவரது சொந்த ஊர் திண்டுக்கல் என்பதும், ரேகாவின் அப்பா ஒரு விவசாயி என்பதும் தெரியவந்தது. ஆரம்பத்தில் ரேகாவை பெண் என்பதாலும், கணவர் உடல்நலக்குறைவால் இருப்பதாலும், 2 குழந்தைகள் இருப்பதாலும் எச்சரித்து விட்டு விடலாம் என்று போலீசார் நினைத்தனர். ஆனால் ரேகா செய்த அலப்பறைகளால் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

The post நீதிபதியின் மகள் எனக்கூறி மிரட்டல் உதவி, துணை கமிஷனர் அலுவலகத்தில் பணம் பறித்த பெண் காவலர் கைது: விடுதிகளில் அறை எடுத்து உல்லாசமாக இருந்ததும் அம்பலம் appeared first on Dinakaran.

Read Entire Article