சென்னை: உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாட்டின் மக்கள் தொகை விகிதத்துக்கேற்ப சமூக பன்முகத்தன்மை மற்றும் பட்டியலின, பழங்குடியின. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு உரிய இடஒதுக்கீட்டை பிரதிபலிக்க சட்டதிருத்தம் மேற்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தி திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த மசோதாவி்ல் கூறியிருப்பதாவது: ”நீதித்துறை நியமனங்களை சீர்திருத்தம் செய்வதற்கும், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்கு, மக்கள் தொகை மற்றும் பெண்களின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளேன். குறிப்பாக உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கும்போதும் மாநில அரசுகளின் கருத்துகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.