நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. அதிக அளவில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது உண்மை; அவர் தான் பொறுப்பு: வெளியான அறிக்கை!!

7 hours ago 2

 

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஸ்வந்த் வர்மாவின் வீட்டில் அதிக அளவில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது உண்மை என விசாரணை குழு சமர்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லம், துக்ளக் சாலையில் உள்ளது. இங்கு மார்ச் மாதம் 14ம் தேதி இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், விரைந்து சென்ற போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையே, அங்கு உள்ள அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது குறித்து அரசுக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு இதுபற்றி 15ம் தேதி தகவல் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் விளக்கத்துடன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார். இதுகுறித்து ஆலோசிக்க கொலீஜியம் கூட்டமும் நடைபெற்றது. அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நீதிபதி யஷ் வந்த் வர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய் கடந்த 22ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, யஷ்வந்த் வர்மா மீதான புகார் குறித்து விசாரிக்க 2 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி அடங்கிய 3 பேர் கொண்ட குழுவை சஞ்சீவ கண்ணா நியமித்தார். இந்த குழுவில் பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழு தனது விசாரணையை முடித்து உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

அந்த அறிக்கையில், நீதிபதியின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்வதில் அஜாக்கிரதையாக செயல்பட்டு இருக்கிறார்கள். பிரச்சினையின் தீவிரம் மற்றும் நீதிபதி அப்போது வீட்டில் இல்லாதது போன்ற காரணங்களை காட்டி உயர் அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்பட்டு இருக்கிறார்கள். வீட்டின் சேமிப்பு அறையில் தான் தீ விபத்து ஏற்பட்டு பணக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அந்த அறை நீதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அங்கு இருந்த பொருட்களுக்கு நீதிபதியும் அவர்களது குடும்பத்தினரும் தான் பொறுப்பு. அந்த பணம் குறைந்த தொகையும் கிடையாது.

நீதிபதியின் அல்லது அவர்களது குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் இவ்வளவு பணம் வந்திருக்காது. தான் சதிதிட்டத்தில் சிக்க வைக்கப்பட்டுள்ளேன் என்ற அவரது கருத்தையும் ஏற்க முடியாது. இது சதி என்றால் ஏன் தனது ட்ரான்ஸ்பரை ஏற்றுக் கொண்டார். மேலும் இது தொடர்பாக ஏன் புகார் அளிக்கவில்லை. நீதிபதி வர்மாவின் நம்பிக்கைக்குரிய ஊழியர்களால் பணம் 15 ஆம் தேதி அதிகாலையில் அகற்றப்பட்டது என்பதை வலுவான ஆதாரங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன” எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் நீதிபதி வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.

The post நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. அதிக அளவில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது உண்மை; அவர் தான் பொறுப்பு: வெளியான அறிக்கை!! appeared first on Dinakaran.

Read Entire Article