புதுடெல்லி: நீட் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு ஜூன் 15ம் தேதி நாடு முழுவதும் 2 கட்டங்களாக நடைபெற இருந்தது. ஆனால் 2024ம் ஆண்டில் இதேப்போன்று தேர்வு நடத்தப்பட்டதில் முதற்கட்ட தேர்வு எளிமையாக இருந்ததாகவும், இரண்டாம் கட்ட தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மேற்கண்ட பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு நடப்பாண்டிலும் இரண்டு கட்டங்களாக நீட் முதுநிலை நுழைவு தேர்வை ஒன்றிய அரசு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு ‘‘நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக தான் நடத்தப்பட வேண்டும். அதற்கான கூடுதல் தேர்வு மையங்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதில் ஒருவேலை ஜூன் 15ம் தேதிக்குள் கூடுதல் தேர்வு மையங்களை கண்டறிய முடியாவிட்டால், மருத்துவ தேர்வுகளுக்கான தேசிய வாரியம் தரப்பு மீண்டும் நீதி மன்றத்தை நாடலாம்’’ என்று உத்தரவிட்டிருந்தனர். இதைதொடர்ந்து, மருத்துவ தேர்வுகளுக்கான தேசிய வாரியம் தரப்பில் இருந்து நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைத்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் தேசிய தேர்வுகள் வாரியம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘நீட் முதுநிலைத் தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நீட் முதுநிலை தேர்வை ஆக.3ம் தேதி நடத்த அனுமதி கேட்டு புதிய மனு: உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வுகள் வாரியம் தாக்கல் appeared first on Dinakaran.