நீட் தேர்வு அச்சம்: சென்னை கிளாம்பாக்கத்தில் மாணவி தற்கொலை

2 days ago 2

சென்னை,

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 4-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனிடையே நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தேர்வு அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக தற்கொலை செய்யும் சோக சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் சென்னை கிளாம்பாக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவி தேர்வு அச்சம் காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தர்ஷினி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனாலும் அவருக்கு கட் ஆப் மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி, வருகிற மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்து தயாராகி வந்தார்.

இந்த சூழலில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த தர்ஷினி, தேர்வு அச்சம் காரணமாக தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article