புதுடெல்லி: பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில், 16 முறை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டங்கள் குலுங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியை அடுத்துள்ள மாலிர் மாவட்ட சிறைச்சாலையில் 600 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் நிலநடுக்கத்தை பயன்படுத்தி சிறைக்கதவுகளை உடைத்து தப்பினர். கைதிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிறையில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். அவர்களை காவலர்கள் தடுத்த போது மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில், காவலர் நடத்திய துப்பாக்கிசூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 12 காவலர்கள் காயமடைந்துள்ளனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் தப்பிச்சென்றுள்ளனர். அதில், 78 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 130க்கும் மேற்பட்டோர் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். சிந்து மாகாண உள்துறை அமைச்சர் ஜியா-உல் ஹசன் லஞ்சர் சிறையில் இருந்து 216 கைதிகள் தப்பிச் சென்றதை உறுதிப்படுத்தினார். 24 மணி நேரத்தில் 78 கைதிகள் மீண்டும் பிடிபட்டதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,’ நேற்று முன்தினம் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டபோது, கைதிகள் பீதியடைந்து தங்கள் அறைகளை விட்டு வெளியே வர வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர் இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறைகளுக்கு வெளியே கொண்டு வந்தனர், அதன் பிறகு சில கைதிகள் வன்முறையில் ஈடுபட்டு தப்பிச் சென்றனர். காவல்துறையினரால் பிடிபட்டவர்கள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படுவார்கள்’ என்று அவர் எச்சரித்தார்.
மாலிர் சிறையில் 100க்கும் மேற்பட்ட இந்திய கைதிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தான் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறி சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஏழை மீனவர்கள். நிலநடுக்கத்தின் போது அவர்கள் ஒரு தனி முகாமில் வைக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்கள் அறைகளில் தங்கியிருந்ததாகவும் ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக மாலிர் சிறை ஐஜி, கண்காணிப்பாளர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
The post நிலநடுக்கத்தைப்பயன்படுத்தி பாக்.சிறையில் இருந்து 216 கைதிகள் தப்பினர்: இந்தியர்களா? பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.