சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ப.க. பொன்னுசாமியின் மகன் நாவரசு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார். கடந்த 1996-ம் ஆண்டு இவரை சீனியர் மாணவரான ஜான் டேவிட் கொலை செய்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த போதும், உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து, கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்த ஜான் டேவிட், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.