நாராயணசாமி நாயுடு நூற்றாண்டையொட்டி வையம்பாளையத்தில் நினைவு வளைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

4 months ago 15

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: உழவர் பெருமக்களுக்காகத் தனது உயிரையே தந்து உழைத்த உத்தமராம் நாராயணசாமி நாயுடு நூற்றாண்டில் அவரது தியாகத்தைப் போற்றுகிறேன். 1925ம் ஆண்டு பிறந்த நாராயணசாமி நாயுடு, 1984ம் ஆண்டு தான் மறையும் வரையிலும், தனது வாழ்க்கையை உழவர் மக்களுக்காகவே அர்ப்பணித்த பெருந்தகையாளர். உழவர்களுக்கு மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று நாராயணசாமி நாயுடு அ.தி.மு.க. ஆட்சியில் போராட்டம் நடத்தினார். பின்னர், 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் கலைஞர் உழவர்களுக்கு மின் கட்டணமே இல்லை என்று அறிவித்து நாராயணசாமி அய்யாவின் கனவை நிறைவேற்றிக் காட்டினார்.

உழவர் நலனே தனது வாழ்வு என வாழ்ந்த நாராயணசாமி நாயுடு 1984ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதியன்று கோவில்பட்டியில் உழவர்களிடையே உரையாற்றிவிட்டு ஓய்வெடுத்தபோது, படுக்கையிலேயே மரணம் அடைந்தார். தனது வாழ்வின் இறுதிநாள் வரையிலும் உழவர்கள் மற்றும் உழைப்பாளர்களின் உரிமைக்காக உழைத்த நாராயணசாமி நாயுடு நூற்றாண்டில், அவரது பெருவாழ்வைப் போற்றும் வகையில், துடியலூர்- கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ.காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் என்பதையும், அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post நாராயணசாமி நாயுடு நூற்றாண்டையொட்டி வையம்பாளையத்தில் நினைவு வளைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article