
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. இன்று அதிகாலை சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர் காரில் சென்று கொண்டிருந்த போது வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. இந்த விபத்தில் நடிகர் யோகி பாபு எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் யோகி பாபு விபத்தில் சிக்கியதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், இது குறித்து நடிகர் யோகி பாபு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, "எனக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை. நான் நலமாக இருக்கிறேன். தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பு பணிக்காக சென்றிருக்கிறேன். அந்த படப்பிடிப்பிற்காக வந்த ஒரு கார் தான் விபத்தில் சிக்கியது. அதில் நானும் என் உதவியாளரும் பயணிக்கவில்லை.
நானும் என் உதவியாளரும் விபத்தில் சிக்கியதாக தவறான தகவல் பரவி வருகிறது. இந்த விஷயம் அறிந்த நண்பர்கள், ரசிகர்கள், திரைபிரமுகர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். என் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும், என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று யோகி பாபு தரப்பில் விபத்து குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.