சென்னை: கோஹ்லியின் ஓய்வு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற விளையாட்டு ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவரது ஓய்வு குறித்து பல்வேறு விளையாட்டு வீரர்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தற்போது ஒரு புதிய கட்டத்தை நோக்கி பயணம் செய்ய ஆயத்தமாகி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் வீரர்களான டிராவிட், லக்ஷ்மன் ஆகியோர் ஓய்வுபெற்ற பிறகு, விராட் கோஹ்லி, புஜாரா, ரகானே போன்ற இளம் வீரர்கள் அணியில் இணைந்து புதிய மாற்றங்களை உருவாக்கினர். தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு மாற்றத்தின் கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
விராட் கோஹ்லி தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தபோது, தேர்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த். தற்போது கோஹ்லியின் ஓய்வு குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், ‘அவரது திறமை நன்கு உணர்ந்ததாலேயே அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கினேன். ஆஸ்திரேலிய மண்ணில் பல வீரர்கள் திணறியபோது, கோஹ்லி தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவரை அணிக்கு தேர்வு செய்தபோது, எதிர்காலத்தில் அவர் பல்வேறு ஜாலங்களை நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால், அப்போது எனக்கு போதுமான ஆதரவு இல்லை. இப்போது கோஹ்லி பல சாதனைகளைப் படைத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
நான் இப்போதும் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால், கோஹ்லியை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமித்திருப்பேன். தற்போது இந்திய டெஸ்ட் அணி சற்று தடுமாறி வருகிறது. இத்தகைய சூழலில், கோஹ்லியிடம் அணியை மீட்டெடுக்கச் செய்து, அதன் பின்னர் ஓய்வு பெறச் சொல்லி அறிவுறுத்தியிருப்பேன். குறிப்பாக, வரப்போகும் இங்கிலாந்து தொடரில் கோஹ்லியை விளையாட வைக்க தேர்வுக் குழு வற்புறுத்தியிருக்க வேண்டும்.
ஒருவேளை நான் அந்தப் பொறுப்பில் இருந்திருந்தால், கோஹ்லியை கேப்டனாக நியமித்து, அவருக்கு ஒரு சிறந்த முடிவை உருவாக்கியிருப்பதோடு, ஒரு ஜாம்பவானுக்கு வழங்க வேண்டிய மிகச் சிறந்த வழியனுப்பும் வைபோகத்தை உருவாக்கியிருப்பேன். கோஹ்லியால் ஒரு தலைமுறையே மாறி இருக்கிறது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை’’ என்றார். இந்நிலையில் கோஹ்லியின் திடீர் ஓய்வு அறிவிப்பால், இங்கிலாந்து தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
The post நான் இப்போதும் தேர்வு குழு தலைவராக இருந்திருந்தால் ஜாம்பவான் கோஹ்லியை டெஸ்ட் அணி கேப்டனாக்கி இருப்பேன்: மாஜி வீரர் ஸ்ரீகாந்த் பேட்டி appeared first on Dinakaran.