
புதுடெல்லி,
நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளின் 700 கிளைகளில், 8.5 லட்சம் போலி வங்கிக்கணக்குகள் தொடங்கி, சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தியதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.
அந்த கணக்குகள், முறையான கே.ஒய்.சி. விதிமுறைகளை பின்பற்றாமலும், போலி ஆவணங்களை பயன்படுத்தியும் தொடங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு சில வங்கி அதிகாரிகள், இ-மித்ரா முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் அந்த சைபர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதும் சி.பி.ஐ.க்கு தெரிய வந்தது.
இந்த கணக்குகள் பெரும்பாலும் ஒருதடவை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. மோசடி பணம் அந்த கணக்குக்கு வந்த சேர்ந்தவுடன், வெவ்வேறு வங்கிக்கணக்குகளுக்கு அப்பணம் பிரித்து அனுப்பப்பட்டு விடுகிறது. அதன்பிறகு, முதலில் தொடங்கிய கணக்கை மூடி விடுகிறார்கள். இதனால், குற்றவாளியை பிடிப்பது சிரமம் ஆகிறது.
இந்த முறைகேடு தொடர்பாக சமீபத்தில் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 42 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
இடைத்தரகர்கள், முகவர்கள், வங்கிக்கணக்குதாரர்கள், வங்கி ஊழியர்கள் என 9 பேர் சி.பி.ஐ.யின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டனர். மேலும், முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், செல்போன்கள், வங்கிக்கணக்கு தொடக்க ஆவணங்கள், பணப்பரிமாற்ற விவரங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.