நாடாளுமன்றத்தை விட இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் உயர்ந்தது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அதிரடி பேச்சு

2 days ago 2

மும்பை: உச்நீதிமன்ற நீதிபதி கவாய், தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் நடந்த பாராட்டு விழாவில் நேற்று பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது. ஜனநாயகத்தின் 3 தூண்களும் அதன் கீழ்தான் செயல்படுகின்றன. அரசியலமைப்பை திருத்துவதற்கு தான் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது. சிலர் நாடாளுமன்றம்தான் உயர்ந்தது என்று கூறுவார்கள். ஆனாலும் தன்னை பொறுத்தவரை அரசியலமைப்பு தான் முதன்மையானது. நிர்வாகம், சட்டமன்றம் அல்லது நீதித்துறை ஆகிய ஜனநாயக அமைப்புகளில் எந்த அமைப்பு உயர்ந்தது என்ற விவாதம் எப்போதுமே இருந்து வருகிறது.

அரசுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பிப்பதன் மூலம் மட்டுமே ஒரு நீதிபதி சுதந்திரமானவர் ஆகிவிட முடியாது. ஒரு நீதிபதிக்கு எப்போதும் ஒரு கடமையுணர்வு இருக்க வேண்டும். ஒரு நீதிபதி என்பவர் பொதுமக்களின் உரிமைகள், அரசியலமைப்பு விவகாரம் மற்றும் கோட்பாடுகளின் பாதுகாவலர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமக்கு அதிகாரம் மட்டுமல்ல, ஒரு கடமையும் உள்ளது என்பதை நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும். தனது தீர்ப்பு குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு ஒரு நீதிபதி செயல்படக்கூடாது. நாம் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். மக்கள் என்ன சொல்வார்கள் என்பது நமது முடிவெடுக்கும் முறையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. நான் தனிப்பட்ட முறையில் அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளை எப்போதும் நிலைநிறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் புல்டோசர் நடவடிக்கைகளுக்கு எதிரான தனது தீர்ப்பை குறிப்பிட்ட அவர், தங்குமிடம் பெறுவது அடிப்படை உரிமை என்றார். அதே நேரத்தில், தான் ஒரு கட்டிட கலைஞர் ஆக விரும்பினேன். ஆனால் எனது தந்தை என்னை ஒரு வழக்கறிஞராக பார்க்க விரும்பினார். மேலும் எனது தந்தையும் ஒரு வழக்கறிஞராக ஆக விரும்பினார். ஆனால் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டதால் முடியாமல் போனது’ என்றார்.

The post நாடாளுமன்றத்தை விட இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் உயர்ந்தது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அதிரடி பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article