நாங்கள் பாவிகள், தவறு செய்துவிட்டோம்… இறைவன்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறிய எம்பி

7 hours ago 2

இஸ்லாமாபாத்: நாங்கள் பாவிகள், தவறு செய்து விட்டோம். அல்லாதான் எங்கள் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்னாள் ராணுவ மேஜரும், எம்பியுமான தாஹிர் இக்பால் கண்ணீர் மல்க பேசியுள்ளார். காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா ராணுவம் அழித்தது. இதற்கு பதிலடி கொடுக்க ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் முயன்றது.

ஆனால் இந்திய ராணுவம், இடைமறித்து பாகிஸ்தானின் ஏவுகணை ட்ரோன், போர் விமானங்களை வானிலேயே சுட்டு வீழ்த்தியது. இதையடுத்து நேற்று லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி உள்பட பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. இதில் பாகிஸ்தானுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சீனாவில் இருந்து வாங்கி லாகூரில் நிறுவப்பட்டிருந்த வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் நம்நாட்டின் ட்ரோன் மூலம் வீழ்த்தப்பட்டது.

இந்நிலையில் தான் முன்னாள் ராணுவ மேஜரும், எம்பியுமான தாஹிர் இக்பால், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க பேசியதாவது: நாம் பலவீனமாக இருக்கிறோம். இதனால் அனைத்து எம்பிக்களும் அல்லாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அல்லாவே… உங்கள் முன் மண்டியிட்டு கேட்டு கொள்கிறோம். எங்களின் நாட்டை காப்பாற்றுங்கள். உங்கள் பிரார்த்தனையால்தான் இந்த நாடு பிறந்தது. இந்த நாட்டை அல்லாதான் நமக்கு கொடுத்தார். அவரால் மட்டுமே பாதுகாக்க முடியும்.

தவறு நம்முடையதாக இருக்கலாம். நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம். நாங்கள் பாவிகள்.. ஆனால் எப்போதும் உங்களை பின்பற்றுபவர்கள். அல்லாஹ்வின் பொருட்டு எங்கள் மீது கருணை காட்டுங்கள். உங்கள் கருணையின் ஒரு துளியையாவது நீங்கள் தந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம். இந்த நாட்டை பாதுகாத்து, எங்கள் எதிரிகளை தோற்கடிக்க எங்களுக்கு வலிமை அளிக்குமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம்’’ என்றார்.
இதன்மூலம் தாஹிர் இக்பால், தங்களின் ராணுவ பலத்தை நம்பவில்லை. அதோடு பலவீனமாக இருக்கிறோம். பாவிகளாக இருக்கிறோம் என்பதை ஒப்பு கொண்டுள்ளார். இவர் பேசிய இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

The post நாங்கள் பாவிகள், தவறு செய்துவிட்டோம்… இறைவன்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறிய எம்பி appeared first on Dinakaran.

Read Entire Article