
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடித் துறைமுகத்தை சேர்ந்த மீனவர்கள்,கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள், அவர்களை சுற்றிவளைத்தனர். தொடர்ந்து, மீனவர்களின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அத்துடன், மீனவர்களிடம் இருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் பறித்துச்சென்றனர்.
இதையடுத்து நாகை மீனவர்கள் உடனடியாக கரைக்குட் திரும்பினர். கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர்களை சக மீனவர்கள் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.